Thursday, October 8, 2009

Thiru Thiru Thuru Thuru


விகடன் விமர்சனம்

கேர்லெஸ் ஹீரோ, பெர்பெக்ட் ஹீரோயின் இருவரையும் துறுதுறு குழந்தை ஒன்று திருதிருவென முழிக்க வைத்தால்... அதுதான் படம்.

மவுலி நடத்தும் விளம்பர நிறுவனத்தில் பணி புரிகிறார் அஜ்மல். பங்சுவாலிட்டி என்றால் 10 அடி தள்ளி நிற்பார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் சின்சியர் சிகாமணி ரூபா மஞ்சரி. நஷ்டத்தில் ஓடும் விளம்பர நிறுவனத்துக்கு பெரிய ஆஃபர் ஒன்று வருகிறது. அதற்கு உடனடி தேவை ஓர் அழகான குழந்தை. கொழுகொழு குழந்தையை தேடி அலையும் அஜ்மலின் கையில் சிக்குகிறது அமுல்பேபி ஒன்று. அனால், அது எங்கிருந்தோ கடத்தப்பட்ட குழந்தை. இதை மௌலிக்கு தெரியாமல் அஜ்மல் சாமர்த்தியமாக சமாளிக்க தோள் கொடுக்கிறார் தோழி ரூபா. இருவரும் குழந்தையின் பெற்றோர் யார் என்று தேட ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்குள் ஏற்படும் சின்னச்சின்ன ஈகோ பிரச்னைகள் தான் இருவரும் சேர்ந்து எதிர்க்கொள்ளும் சவால்கள், சங்கடங்களை ஜாலியாக சொல்கிறது படம்.

அழகான காதல் + காமெடி + த்ரில்லர் படத்தை தந்திருக்கும் அறிமுக இயக்குனர் நந்தினிக்கு வாழ்த்துக்கள். முதல் 10 நிமிடங்கள் தொய்வாக செல்கிறது படம். இன்னுமொரு ஹீரோ ஹீரோயின் ஈகோ படமா என்று அலுப்பு வரும்போது குறுக்கிடுகிறது அந்த குழந்தை. அதற்கப்புறம் சவடால்கள், சண்டைகள் இல்லாமல் வேகமெடுத்து பறக்கிறது திரைக்கதை.

பேஸ்ட்டை தலைகீழகாக பிரஷ்ஷில் தடவுவதில் இருந்து போதையில் ஜட்டியை பிரிஜ்ஜுக்குள் வைத்து தேடி அலைவது என அலட்சியமான கேரக்டரை அலட்டாமல் செய்திருக்கிறார் அஜ்மல். ரூபாவோடு சதா வம்பிழுக்கும் அஜ்மல், பிற்பாடு அவரோடு நட்பாகி காதலாகி கசிந்துருகுவது அழகு கவிதை.

தமிழுக்கு க்யூட் ஹீரோயின் வரிசையில் நல்வரவு ரூபா மஞ்சரி. அஜ்மல் வீட்டில் தங்குவதற்காக பெற்றோரிடம் பொய் சொல்லும் போது ரூபா மஞ்சரி முகத்தில் செஞ்சுரி எக்ஸ்பிரஷன்கள்.

ஒரு சென்டிமென்ட் கதாபாத்திரத்திரம். ஆனால், அழுது வடியக்கூடாது. இரண்டையும் பேலன்ஸ் செய்து சமாளித்திருக்கிறார் மவுலி. ஞாபக மறதியால் பெயர்களை தப்புத்தப்பாக அவர் உச்சரிப்பது சுவாரஸ்யம். ஆனால் அது மீண்டும் மீண்டும் ரிப்பீட் ஆவது அலுப்பு.

பக்கத்து ப்ளாட்காரர்களிடம் குழந்தையை மறைக்க அஜ்மல் படும்பாடு, மர்மமான அந்த ஹாஸ்பிடல் கம்பவுண்டர் என அவ்வப்போது சுவாரஸ்ய முடிச்சுப்போட்டு அதை காமெடியாக அவிழ்க்கிறார்கள். வில்லி நர்ஸை அஜ்மலும் ரூபாவும், மயிலிறகு, ஐஸ்கட்டி என விதவிதமாக டார்ச்சர் செய்யும் காட்சி சுவாரஸ்யம். ஆனால் போலீஸை இவ்வளவு துõரம் காமெடி பீஸ் ஆக்கிஇருக்க வேண்டாம். அஜ்மலும் ரூபாவும் பாண்டிச்சேரியில் செய்யும் சாகசங்கள் போலீஸ் ப்ரெண்ட் மூலமாகவே முடித்திருக்கலாமே? குழந்தையின் பெற்றோர் யார் என்பது தான் முழுப்படத்துக்குமான கேள்வி. அந்த கேள்விக்கு பதில் கிடைத்த பின்னும் கதை முடிவுக்கு வராமல் இழுத்தடித்திருக்க வேண்டாமே?

மணிசர்மாவின் இசையில் அதிரிபுதிரி ஆரம்பம். டாக்டர் மாப்பிள்ளை ஓ.கே.வா பாடல்கள் மனதில் தங்குகின்றன. சுதீர் கே.சவுத்ரியின் ஒளிப்பதிவு படத்துக்கு அழகு சேர்த்திருக்கிறது.

துறுதுறு குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம் கவலைகள் பறந்து விடும். இது அப்படி ஒரு துறுதுறு குழந்தை.

விகடன் மார்க் : 43/100

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets