Thursday, October 8, 2009

Vijay's Speech



தமிழ்த் திரையுலகில் ரஜினிக்கு பிறகு அரசியல் பிரவேச சர்ச்சையில் அதிக நாட்கள் சிக்கியவர் நடிகர் விஜய். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுலை விஜய் சந்தித்து பேசியதன் மூலம் பரபரப்பு மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல், விஜய் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம் என்று அழைப்பு விடுத்தார். இதனால் விஜய்யின் அரசியல் பிரவேசம் உறுதி என செய்திகள் வெளியாயின. விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களை புறக்கணிப்போம் என்று வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள் தீர்மானம் போட்டன. ஒரு சில அமைப்புகள் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை உடனடியாக அறிவிக்கும்படி கோரி வருகின்றன.

தன்னைச் சுற்றி வரும் இந்த அரசியல் பிரவேச சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த விஜய் கடந்த வாரத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அன்றைய தினம் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததால் பேட்டி தள்ளி வைக்கப்பட்டது. இதற்கிடையில் ராகுலின் பேட்டி, விஜய் ரசிகர்களை ரொம்பவே முறுக்கேற்றியது. இளைய தளபதி காங்கிரசில் இணைவது உறுதி என்று ரசிகர்கள் நம்பினார்கள்.

இந்நிலையில் அரசியல் பிரவேச சர்ச்சைக்கு இன்று நடிகர் விஜய் தற்காலிக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இப்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கும் விஜய் பேட்டியின்போது ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பு ரசிகர் - ரசிகைகளுக்கும், என்னை உயரத்தில் வைத்து கொண்டாடும் தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்.

அண்மையில் ராகுலை நான் சந்தித்தது பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பல விதமான செய்திகள், அனுமானங்களின் அடிப்படையில் வந்து கொண்டிருந்தன. ராகுல் சென்னையில் அளித்த பேட்டியில், எங்கள் சந்திப்பை பற்றி அழகாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதற்கு பிறகும் பல பத்திரிகை நண்பர்கள் என்னை தொடர்பு கொண்டு, அதுபற்றிய என்னுடைய விளக்கங்களை கேட்டு பெற்றுக் கொண்டனர். ஆகவே என் முடிவை உங்களிடம் கூறவே இந்த சந்திப்பு.

அண்மையில் (ஆகஸ்ட் 24ம் தேதி) டில்லியில் ராகுலை அவரது வீட்டில் நான் சந்தித்தது உண்மை. ராகுல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து, இன்றைய தினத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்பவர். அவர் இளைஞர்கள‌ை குறி வைத்து செயல்பட்டு வருகிறார். நானும் இளைஞர்களை குறி வைத்துதான் என் மக்கள் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறேன். இந்த அடிப்படையில் அவரை சந்தித்தது எனக்கும், என் ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த பெருமையான விஷயமாக கருதுகிறேன்.

ராகுல், அன்போடும் - எளிமையோடும் என்னை வரவேற்று உபசரித்து உரையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்தியாவின் மிகப்பெரிய பதவியிலும், அந்தஸ்திலும் இருக்கும் ராகுலின் நாகரிகமான அனுகுமுறையும், கண்ணியம் கலந்த பேச்சும் எனக்கு வியப்பை தந்தது. ஆகவே அந்த சந்திப்பு ஓர் ஆரோக்யமான சந்திப்பாக இருந்தது. அந்த சந்திப்பின்போது என்னைப் பற்றியும், என் கலை வாழ்க்கை பற்றியும் அக்கறையுடன் விசாரித்தார். அப்போது எனது மக்கள் இயக்கம் பற்றியும், தமிழக அரசியல் பற்றியும் நீண்ட நேரம் மனம் விட்டு உரையாடினோம். ஆனால் அரசியல் பற்றி என்ன பேசினோம் என்பதை இப்போது சொல்வது நாகரிகமாக இருக்காது.

என் வளர்ச்சியில் என் ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எனது இயக்கத்தினர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. நான் எந்த முக்கிய முடிவை எடுத்தாலும், என் ரசிகர்களையும், இயக்கத்தினர்களையும் கலந்து ஆலோசித்து அவர்கள் கருத்துக்களை கேட்டுத் தெரிந்த பின்புதான் முடிவு எடுப்பேன். எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் என்பது எனக்கு தெரியும். எனக்கு பின்னால் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அந்த இளைஞர் சக்தியை சரியான பாதையில், வழிநடத்திச் செல்ல வேண்டிய ஒரு சமூக பொறுப்பில் நான் இருக்கிறேன். அதனால்தான் மக்கள் இயக்கத்தை தொடங்கி, அவர்கள் மூலம் பல நற்பணிகளை செய்து வருகிறேன். அவர்களும் துடிப்போடும், வேக‌த்தோடும் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் இப்போது என்னுடைய இலக்காக இருக்கிறது.

ஆகவே உடனடியாக, அரசியல் ரீதியாக நான் எந்தவொரு முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன் என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன். ஆனால் தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், உலக சமுதாயத்திற்கும் நல்லது நடக்க வேண்டும் என்பதுதான் எனது முக்கிய குறிக்கோள். அதற்காக தேவைப்படும்போது களத்தில் இறங்கி போராடவும் தயங்க மாட்டேன். எதிர்காலத்தில் இதை‌யெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு ஒரு வளமையான, வலிமையான அரசாங்கத்தை உருவாக்க எந்த கட்சி முனைகிறதோ, அந்த கட்சியோடு எங்கள் சக்தி கை கோர்ப்பது பற்றி அப்போது முடிவெடுப்பேன். ஆகவே அன்பும், பாசமும் வைத்திருக்கும் ரசிகர்களும், இயக்கத்தை சார்ந்தவர்களும் மற்றும் சமூக உணர்வு கொண்ட இளைஞர்கள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், என்ஜினீயர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், குடும்ப பெண்கள் மற்றும் அனைத்து தரப்பினர்களும் மக்கள் இயக்கத்தில் இணைந்து, அதை வலுப்படுத்தி நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை நடக்க முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க தமிழகம்! வெல்க பாரதம்!!

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார். அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், எனக்கு அந்த அளவுக்கெல்லாம் அரசியல் தெரியாது என்று கூறி நழுவினார். முதல்வர் கருணாநிதி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த விஜய், கலைஞர் இப்போது இளைஞராக நாட்டுக்கு உழைக்கிறார் என்றார். அரசியலுக்கு வருவீர்களா, மாட்டீர்களா? என்று கேட்டதற்கு, கண்டிப்பாக வருவேன். ஆனால் இப்பேதைக்கு இயக்கத்தை வலுப்படுத்துவதே என் நோக்கம். அரசியலுக்கு வரும்போது கண்டிப்பாக உங்களையெல்லாம் அழைத்து, முறைப்படி அறிவித்து விட்டு வருவேன், என்று கூறி ரசிகர்களை நோக்கி கையசைத்தபடி புறப்பட்டு சென்றார்.

- தினமலர்

0 comments:

Post a Comment

Recent Comments

Powered by Blogger Widgets